ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி (பிஆர்எஸ்) எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, 37, உயிரிழந்தார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக ஒரு பெண் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் லாஸ்யா நந்தியா.
இந்நிலையில், ஹைதராபாத்தில் இவரது கார் சென்றுகொண்டிருந்தபோது சுல்தான்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது.
இதில், எம்எல்ஏ லாஸ்யா நந்திதா படுகாயமடைந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லாஸ்யா நந்திதாவின் கார் ஓட்டுநரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விபத்து தொடர்பாக அங்குள்ள காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் நார்கட்பள்ளியில் நடந்த மற்றொரு சாலை விபத்தில் லாஸ்யா உயிர் தப்பினார். அந்த விபத்தில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
இதைத்தொடர்ந்து அடுத்த 10 நாள்களுக்குள் நடந்த விபத்தில் நந்திதா உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எம்எல்ஏ லாஸ்யா நந்திதா மறைவுக்கு பிஆர்எஸ் கட்சி முன்னணித் தலைவர் கே.டி.ராமா ராவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.