திரிபுரா: வாக்குமூலம் அளிக்க வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொள்ள முயன்ற நீதிபதியை அம்மாநில உயர் நீதிமன்றம் அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் உள்ள கமால்பூர் நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 16ஆம் தேதியன்று நீதிபதியின் தனியறையில் வாக்குமூலம் அளிப்பதற்காக பெண் ஒருவர் வந்திருந்தார். அப்போது தன்னிடம் நீதிபதி தவறான முறையில் நடக்க முயன்றதாக அப்பெண் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியிடம் புகார் அளித்திருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் கணவரும் கமால்பூர் பார் அசோசியேஷனிடம் தனியாகப் புகார் அளித்திருந்தார்.
“பிப்ரவரி 16ஆம் தேதி எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் அறைக்குச் சென்றேன். அப்போது அவர் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார்.
“அவரது அறையை விட்டு விரைந்து வெளியே வந்த நான் இதுகுறித்து வழக்கறிஞர்கள் மற்றும் எனது கணவரிடம் தெரிவித்தேன்,” என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் கூறிய புகாரின் உண்மைத் தன்மை குறித்து மூவர் கொண்ட குழுவினர் விசாரணை செய்து வந்தனர்.
மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி கவுதம் சர்க்கார், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சத்யஜித் தாஸ் ஆகியோர் கமல்பூரின் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி அலுவலகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையின் அடிப்படையில் கமால்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்து அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.