திருவனந்தபுரம்: குடும்பத் தகராறு சூடுபிடித்ததில் உறவினரின் நாயைக் கொடூரமாகக் கொன்ற ராஜேஷ் என்ற ஆடவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்ட நெடும்கண்டம் பகுதியில் பிப்ரவரி 23ஆம் தேதியன்று நடந்த இச்சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் உறவினரின் நாயைத் தன் கைகளில் எடுத்து மிகுந்த கோபத்துடன் தரையை நோக்கி வீசிக் கொன்றதாகக் காவல்துறையினர் கூறினர்.
அதே வட்டாரத்தில் குடியிருக்கும் உறவினர் ஒருவருடன் ராஜேஷுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பலகாலமாக அவர்களுக்கிடையே குடும்பச் சொத்து விவகாரம் தொடர்பாக சச்சரவுகள் இருந்துவருவதாகவும் அறியப்படுகிறது.
வாக்குவாதத்தின்போது உறவினரின் நாய் ராஜேஷைக் கடித்ததால் ஆத்திரத்தில் அந்த ‘பொமரேனியன்’ நாயை அவர் தரையில் வீசிக் கொன்றதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
விலங்குகளுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்தல், மரணம் விளைவித்தல் தொடர்பான சட்டத்தின்கீழ் ராஜேஷ் மீது வழக்கு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.