இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் மாவட்டத்தில் கிராம மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் ஒன்று, குளத்தில் விழுந்ததில் பயணம் செய்தவர்களில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்.
டிராக்டரில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் என்று இந்துஸ்தான் டைம்ஸ் தகவல் தெரிவித்தது.
பௌர்ணமியை முன்னிட்டு கிராம மக்கள் கங்கையில் நீராடுவதற்காக டிராக்டரில் சென்றுள்ளனர். கஸ்கஞ்ச் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த காருடன் மோதாமல் இருப்பதற்காக டிராக்டரை ஓட்டுநர் திருப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது டிராக்டர் குளத்தை நோக்கிப் பாய்ந்தது. குளத்தில் டிராக்டர் விழுந்ததில் குறைந்தது 22 பேர் மாண்டனர்.
இறந்தவர்களில் எட்டு குழந்தைகள், ஏழு பெண்கள் என்று அலிகார் வட்டார காவல்துறை உயர் அதிகாரி ஷாலப் மாதூர் தெரிவித்தார்.
கார் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக டிராக்டரை ஓட்டுநர் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் விழுந்ததாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அறிவித்தார்.
காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.