கவுகாத்தி: அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார்.
இந்நிலையில், அசாமில் இஸ்லாமிய திருமண, விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய மசோதா கொண்டு வர இருப்பதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார்.
“இந்தச் சட்டத்தின்கீழ் எந்த இஸ்லாமியரும் திருமணத்தையோ விவாகரத்தையோ பதிவு செய்ய முடியாது. இந்த விவகாரங்கள் அனைத்தும் நாம் ஏற்கெனவே வைத்துள்ள திருமண சிறப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்” என்று அவர் இது தொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்காகவே இச்சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக அம்மாநில முதல்வர் குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே பாஜக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறது என பாஜகவை காங்கிரஸ் சாடியது.