புதுடெல்லி: லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்தில் ரஷ்யா சென்ற இந்திய இளைஞர்கள் சிலர் அங்கு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர். முகவர்களின் வார்த்தைகளை நம்பி ரஷ்யா சென்ற அவர்கள், தற்போது யுக்ரேனுடனான ரஷ்ய போரில் முன்கள வீரர்களாக போரிட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து இளைஞர்களை உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணிக்கு முகவர்கள் அழைத்து வந்து ரஷ்ய ராணுவத்தில் சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவில் தனியார் ராணுவம் என்று அழைக்கப்படும் வாக்னர் குழுமத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து அதிகாரபூர்வ தகவல் எங்கும் இல்லை.
இதற்காக ரஷ்யாவில் இரண்டு முகவர்களும் இந்தியாவில் இரண்டு முகவர்களும் செயல்பட்டுள்ளனர். பைசல் கான் என்ற மற்றொரு முகவர் துபாயில் இருந்து இந்த நான்கு பேரையும் ஒருங்கிணைத்துள்ளார்.
இவர்கள் அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனால் வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள்.
ரஷ்யாவில் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் வேலை என்ற பெயரில் இந்திய இளைஞர்களை அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்து வருவதாக பிபிசி தெரிவித்தது.
ராஜஸ்தானைச் சேர்ந்த மொயின், தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனிசாமி ரமேஷ்குமார் ஆகியோர் ரஷ்யாவில் செயல்பட்டு வருகின்றனர் என பிபிசி கூறியது.
இவர்கள் விளம்பரம் கொடுத்து இளைஞர்களை இதில் சிக்க வைக்கின்றனர் என்றும் மும்பையில் உள்ள சுபியான் மற்றும் பூஜா என்ற முகவர்களால் இந்திய இளைஞர்கள் சிக்குகின்றனர் என்றும் பிபிசி குறிப்பிட்டது.
சம்பவத்திற்குப் பிறகு மும்பையில் உள்ள முகவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என பிபிசி கூறியது.
குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இல்லாதது குறித்து ரஷ்யாவில் இளைஞர்களிடமிருந்து வெளியான காணொளிகள் மூலம் இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.