புதுடெல்லி: உக்ரேனில் ஆளில்லா வானூர்தி தாக்குதலில் 23 வயதான இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னர், ரஷ்ய ராணுவத்தில் வேலைகளுக்குச் சேர இந்திய இளைஞர்கள் சிலர் கையெழுத்திட்டதை இந்திய அரசாங்கம் ஒப்புகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த அந்த இந்தியரின் பெயர் ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா எனக் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், பிப்ரவரி 21ஆம் தேதியன்று ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள டொனெட்ஸ்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதலில் சூரத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் கொல்லப்பட்டார் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.