ஆக்ரா: காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி பயணம் என்ற பெயரில் மணிப்பூரிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேற்கு வங்காளம், பீகார் வழியாக உத்தரப்பிரதேசத்துக்குள் அவரது நடைப்பயணம் நுழைந்துள்ளது. அம்மாநிலத்தின் மொராதாபாத் நகரில் ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி பிப்ரவரி 24ஆம் தேதி இணைந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார்.
முன்னதாக, காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு உறுதியானது. 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அண்மையில், ‘இண்டியா’ கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் விலகி பாஜக கூட்டணியில் இணைந்தன. இது அக்கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மேற்குவங்கத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணாமூல் தனித்துப் போட்டியிடும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இண்டியா கூட்டணியிலிருக்கும் தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள் காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளன.