வாஷிங்டன்: 2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், அவ்வாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புரை 62 விழுக்காடு அதிகரித்ததாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை மையமாகக் கொண்ட ஆய்வுக் குழு ஒன்று பிப்ரவரி 26ஆம் தேதியன்று தெரிவித்தது.
கடந்த மூன்று மாதங்களில் இஸ்ரேல்-காஸா போர் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று அது கூறியது.
2023ஆம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான 668 வெறுப்புரைகளை இந்தியா ஹெட் லேப் எனும் ஆய்வுக் குழு பதிவு செய்தது.
அவற்றில் 255 வெறுப்புரைகள் ஆண்டின் முற்பகுதியிலும் 413 வெறுப்புரைகள் கடைசி ஆறு மாதங்களிலும் பதிவாகின.
இந்த விவரங்களைக் காட்டும் அறிக்கையை ஆய்வுக் குழு பிப்ரவரி 26ஆம் தேதியன்று வெளியிட்டது.
முஸ்லிம்களுக்கு எதிரான வெற்றுப்புரைகளில் ஏறத்தாழ 75 விழுக்காடு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிகழ்ந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆக அதிகமான வெறுப்புரைகள் பதிவாகின.
எவையெல்லாம் வெறுப்புரையாகக் கருதப்படும் என்பது குறித்து ஐக்கிய நாட்டு நிறுவனம் வரையறை வகுத்திருப்பதாகவும் அதைப் பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியிருப்பதாகவும் ஆய்வுக் குழு கூறியது.
2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி வகிக்கிறார்.
இவ்வாண்டு நடைபெறும் தேர்தல்களுக்குப் பிறகும் அவர் பிரதமராகத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியின் ஆட்சியின்கீழ் முஸ்லிம்களுக்கு எதிராகப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதாகக் கூறி, முஸ்லிம்களுக்குச் சொந்தமான கட்டடங்களைத் தகர்ப்பது, கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது வகுப்பறைகளில் முஸ்லிம் பெண்கள் ‘ஹிஜாப்’ எனும் தலையங்கியை அணியக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது ஆகியவற்றை ஆய்வுக் குழு உதாரணம் காட்டியது.
இந்நிலையில், இந்தியாவின் சிறுபான்மையினத்தவர்கள் துன்புறுத்தப்படுவதில்லை என்று மோடி தலைமையிலான அரசாங்கம் அடித்துக் கூறுகிறது.
தனது கொள்கைகள் அனைத்தும், எல்லா இந்தியர்களுக்கும் பலன் தருபவை என்று அது வலியுறுத்துகிறது.
ஆய்வுக் குழு வெளியிட்ட தகவல்கள் குறித்து வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகமும் இந்திய வெளியுறவு அமைச்சும் கருத்து தெரிவிக்கவில்லை.