உடை அழுக்காக இருந்ததால் ரயிலில் செல்ல விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெங்களூருவில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில் ஊழியர் பிப்ரவரி 26ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளைச் சட்டை அணிந்து, தலையில் துணி மூட்டையுடன் வந்த விவசாயி, செல்லுபடியாகும் பயணச் சீட்டு வைத்திருந்தபோதும் பெங்களூரு ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், இந்தியில் பேசும் அந்த விவசாயி பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ள பயணப் பைகளைச் சோதிக்கும் கருவி அருகே நிற்கிறார். கார்த்திக் சி ஐரானி என்பவர், விவசாயி மெட்ரோவைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கை குறித்து ஊழியர்களிடம் விசாரிக்கிறார்.
விவசாயியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்று ஐரானியும் மற்றொருவரும் பாதுகாப்பு ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர் உடைகளை மட்டுமே வைத்திருப்பதாகவும், இது பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) விதிகளை மீறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சக பயணிகளின் தலையீட்டைத் தொடர்ந்து, அந்த விவசாயிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பரவலாகப் பரவிய அந்தக் காணொளி சமூக ஊடங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெங்களூரு மெட்ரோவில் விஐபிகள் மட்டும்தான் பயணிக்க வேண்டுமா? மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என்று பலர் கண்டனத்தை பதிவு செய்தனர்.
விவசாயி பயணம் மேற்கொள்ள இடையூறு செய்த பாதுகாப்பு மேற்பார்வையாளரைப் பணிநீக்கம் செய்துள்ளதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், “ராஜாஜி நகர் மெட்ரோ விவகாரம் விசாரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட பாதுகாப்பு மேற்பார்வையாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயணிக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.