புதுடெல்லி: இந்தியாவில் வறுமை 5 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்துள்ளது. கிராமங்கள், நகரங்களில் வசிக்கும் மக்கள் செழிப்பான வாழ்க்கை வாழும் வகையில் மாறிவருகின்றனர் என்று நிடி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை நடத்தப்பட்ட நுகர்வோரின் செலவினம் தொடர்பான கணக்கெடுப்பை மேற்கோள் காட்டியுள்ள இவர், இந்தியாவில் வறுமை 5 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
“வீடுகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது தொடர்பான தரவுகள் மூலம் நாட்டின் வறுமை நிலையை மதிப்பிட முடிகிறது. வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மூலமே நாம் வெற்றியை உணர முடியும்.
“கிராமப்புறம், நகர்ப்புற மக்களின் நுகர்வு 2.5 மடங்கு அளவில் அதிகரித்துள்ளது. நகர்ப்புற குடும்பங்களில் சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு 2011-12ஆம் ஆண்டில் இருந்து 33.5 விழுக்காடு உயர்ந்து ரூ.3,510 ஆக தற்போது உள்ளது,” என சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

