ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதிகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
அவர்கள் ஊருக்குள் புகுந்து கிராம மக்களை தாக்குதல் நடத்துவதும் அரசியல் தலைவர்களைத் தாக்குவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இதனால், நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
பிஜாப்பூர் மாவட்டத்தில் ஜங்கிலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில், பதுங்கியுள்ள நக்சலைட்டுகளைத் தேடி மாவட்ட ஆயுதப் படையினரும் மத்திய காவல் படையினரும் தனித்தனியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சோட்டே துங்காலி வனப் பகுதியில் ஆயுதப் படையைச் சேர்ந்த ரோந்துக் குழுவினர் சென்றபோது, நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு ஆயுதப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்தச் சம்பவத்தில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

