ராஞ்சி: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் டால்டன்கஞ்ச் எனுமிடத்தில் வசிக்கிறார் சஞ்சய் சிங்.
தான் வளர்க்கும் பசுவிற்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவனம் வைக்கச் சென்ற அவருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.
அந்தப் பசு, நாலடி நீளமுள்ள மலைப்பாம்பை மென்று தின்றுகொண்டிருந்தது.
“எப்படியோ மாட்டுக் கொட்டகைக்குள் நுழைந்திருக்கிறது அப்பாம்பு. நான் பார்த்தபோது பசுவின் வாயிலிருந்து பாம்பின் ஒரு பகுதி தொங்கிக்கொண்டிருந்தது. உடனடியாக அதை இழுத்து வெளியே போட்டேன்,” என்றார் சிங்.
பின்னர் விலங்குநல மருத்துவரை அணுகியதாகக் கூறிய சிங், “பசுவைப் பரிசோதித்த மருத்துவர், அது கடித்துத் தின்றது நச்சுப் பாம்பு அன்று; மலைப்பாம்பு என்று உறுதிப்படுத்தினார்,” என்றார்.
‘பைகா’ எனும் நோய் ஏற்பட்டால் மாடுகள் இவ்வாறு வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்ளும் என்று மூத்த விலங்குநல மருத்துவர் ஒருவரை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 2020ஆம் ஆண்டு இதேபோல் ஆஸ்திரேலியாவில் பசு ஒன்று மலைப்பாம்பைக் கடித்துத் தின்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.