அகமதாபாத்: பாகிஸ்தானில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது தொடர்கிறது.
அதைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்படைக் கப்பல்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருளுடன் ஒரு கப்பல் வருவதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குஜராத் காவல்துறை, இந்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை இந்திய கடற்படை யுடன் இணைந்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளன.
அப்போது, குஜராத் கடல் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்றுகொண்டிருந்த சிறிய வகைக் கப்பல் ஒன்றைச் சுற்றி வளைத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அக்கப்பலில் 3.3 டன் எடையுள்ள போதைப்பொருள்கள் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றியதுடன் அக்கப்பலில் இருந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அண்மையில் முறியடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளில் இதுவே ஆகப் பெரியது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கடந்த வாரம் புனே, டெல்லியில் நடைபெற்ற சோதனைகளில் கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாய் அளவிலான போதைப்பொருள்கள் சிக்கின. இது நடந்து ஒரு வாரத்தில் மீண்டும் ஒரு பெரிய கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
“போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவதில் இந்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நேரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, கடற்படை, குஜராத் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என அமித்ஷா தெரிவித்துள்ளார்.