சென்னை: தேர்தல் நேரம் என்பதால் மத்திய அரசின் சார்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்கள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் சென்னை திரும்பிய கனிமொழி, செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தமிழக முதல்வர் முன்வைத்த ஒரு கோரிக்கையைக் கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று அவர் சாடினார்.
திமுக அரசு எப்போதுமே நல்ல திட்டங்களை எதிர்ப்பதில்லை என்று குறிப்பிட்ட அவர், மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு எல்லாம் மத்திய அரசின் ஸ்டிக்கர்களை ஒட்டி உரிமை கோருகிறார்கள் என்றும் விமர்சித்தார்.
“பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு கால்வாசி தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் என்று குறிப்பிட்ட அத்திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள்,” என்றார் கனிமொழி.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிட்டார் என்றும் கனிமொழி சுட்டிக்காட்டினார்.
“எங்களது பெயரைச் சொல்லக் கூட பிரதமருக்கு மனமில்லை. தமிழக நலனுக்காக மத்திய அரசு அப்படியென்ன திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது,” என கனிமொழி கேள்வி எழுப்பினார்.
திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவுக்கு கனிமொழி தலைமையேற்றுள்ளார். இது தொடர்பாக பொதுமக்களிடம் அக்குழுவினர் கருத்துகளைக் கேட்டு வருகின்றனர்.

