புதுடெல்லி: இந்தியாவின் ஆகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி, தமது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு சொந்த ஊரில் 50,000க்கு மேற்பட்டோருக்கு ஆடம்பர விருந்தளித்துள்ளார்.
பிப்ரவரி 28ஆம் தேதி மாலை முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும் மணமக்கள் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட்டுடன் இணைந்து, குஜராத்தின் ஜாம்நகரில் கிராமத்தினருக்கு மூன்று நாள் விருந்தைத் தொடங்கிவைத்தனர்.
அடுத்த சில நாள்களுக்கு இத்தகைய கொண்டாட்டங்கள் தொடரும் என்றும் உலகின் ஆக அதிக செல்வாக்குமிக்கவர்கள் அவற்றில் கலந்துகொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெருநிறுவனத் தலைவர்கள், தொழில்துறை ஜாம்பவான்கள், பாலிவுட் நடிகர்கள், அரசியல்வாதிகள் எனப் பலதரப்பினர் இந்நிகழ்ச்சிக்கு வருகையளிப்பர் என்று கருதப்படுகிறது.
மூன்று நாள் விருந்தின் முக்கிய நாளான மார்ச் 1ஆம் தேதி இத்தகையோர் விருந்தில் கலந்துகொள்வர்.
இதற்காக, பெரிய கோயில் வளாகத்தைக் கட்டுகிறார் முகேஷ் அம்பானி. 66 வயதாகும் இவர், ஆசியாவின் ஆகப் பெரிய பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது. இவரது சொத்து மதிப்பு 114 பில்லியன் அமெரிக்க டாலர் (S$153.28 பில்லியன்).
திரு முகேஷ் அம்பானி, 2018ஆம் ஆண்டு தமது மகளின் திருமணத்தை 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நடத்தினார். இந்தியாவில் நடைபெற்ற ஆக அதிக செலவிலான திருமண நிகழ்ச்சி அது.