மாண்ட குட்டி யானைகளைப் புதைக்கும் ஆசிய யானைகளின் வழக்கம் குறித்து அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரியும் புனேயைச் சேர்ந்த ஆய்வாளரும் இணைந்து அந்த ஆய்வை நடத்தினர்.
‘ஜர்னல் ஆஃப் திரெட்டண்ட் டாக்ஸா’ எனும் அனைத்துலக சஞ்சிகையில் பிப்ரவரி 26ஆம் தேதி வெளிவந்த அந்த ஆய்வில், யானைகள் இவ்வாறு புதைத்த ஐந்து சம்பவங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க இலக்கியங்களில் யானைகளின் இத்தகைய வழக்கம் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஆசிய யானைகளின் இவ்வழக்கம் குறித்து முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
இமாலயச் சமவெளிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் பாசன வடிகால்களில் யானைகள் இவ்வாறு, மாண்ட குட்டிகளைப் புதைத்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாண்ட குட்டி யானையின் துதிக்கை அல்லது கால்களைப் பிடித்துத் தூக்கிச்சென்று மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில், அதன் கால்கள் வானைப் பார்த்த வண்ணம் இருப்பதுபோல் போட்டு, மேலே மண்ணைத் தூவி, யானைகள் அதைப் ‘புதைக்கின்றன’.
பின்னர் அந்தப் பகுதிக்குச் செல்வதை அந்த யானைகள் தவிர்ப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.
இந்த ஆய்வு, ஆசிய யானைகளின் ஆழமான உணர்வுகள், மேம்பட்ட சிந்தனைகள், சமூகச் சடங்குகளில் ஈடுபடும் தன்மை போன்றவை குறித்தக் கூடுதல் புரிதலுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.