புதுடெல்லி: அனைத்துலகச் சந்தையில் இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி கடந்த ஆண்டில் சாதனை அளவை எட்டியிருந்தது. ஆனால், அதற்கு எதிர்மாறாக நடப்பாண்டில் அது வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.
அனைத்துலகச் சந்தையில் பாகிஸ்தான் பாசுமதி அரிசிக்கு உள்ள வரவேற்பு காரணமாக இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு பலத்த அடி விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய பாசுமதி அரிசியின் பெரும் போட்டியாளராக பாகிஸ்தான் தற்போது உருவெடுத்துள்ளது.
ஈரான், ஈராக், ஏமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நறுமணம் கமழும் பாசுமதி அரிசியை இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டிபோட்டு ஏற்றுமதி செய்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டில் 4.9 மில்லியன் மெட்ரிக் டன்னாக இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி உயர்ந்தது. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக கடந்தாண்டில் 5.4 பில்லியன் டாலர்களை இந்தியா குவித்தது.
இது முந்தைய ஆண்டைவிடவும் கிட்டத்தட்ட 21% அதிகமாகும்.
இந்தச் சூழலில், இந்த 2024ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பாசுமதி அரிசியின் உற்பத்தி அதிகரித்ததை அடுத்து, இந்தியாவைவிட குறைந்த விலைக்கு பாசுமதி அரிசியை விற்பனை செய்ய பாகிஸ்தான் முனவந்துள்ளது.
பாகிஸ்தானின் மொத்த அரிசி ஏற்றுமதி 2023-24ஆம் நிதியாண்டில் 5 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3.7 மில்லியன் டன்னாக இருந்தது.
பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு சரிந்ததும் பாகிஸ்தானின் ஏற்றுமதியை மிகவும் போட்டித்தன்மையுடன் ஆக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய பாசுமதி அரிசியை அதிகம் வாங்கும் நாடான ஈரான் கடந்தாண்டின் கொள்முதலை 36% குறைத்தது. அதேவேளையில் ஈராக், ஓமன், கத்தார், சவுதி அரேபியா நாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்யப்பட்டதால் இந்திய பாசுமதி அரிசி முன்னிலை வகித்தது.
இதனிடையே இவ்வாண்டின் தொடக்கம் முதலே பாசுமதி அரிசி ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியது.
செங்கடல் வழி கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள், அதிகரித்த சரக்கு செலவுகள் உள்ளிட்ட காரணங்களால் வரும் மாதங்களில் பாசுமதி அரிசி ஏற்றுமதி மேலும் குறையக்கூடும் என்பதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.