புதுடெல்லி: இந்தியாவில் மீன் உணவைச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளதாகவும் ஏறக்குறைய 72.1 விழுக்காடு மக்கள் மீன் உணவை அதிகம் விரும்பிச் சாப்பிடுவதாகவும் அண்மைய ஆய்வுத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
மீன் உணவுச் சாப்பிடுபவர்கள் தொடர்பாக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மன்றம், விவசாயம், விவசாயிகள் நல அமைச்சு, அனைத்துலக மீன்கள் ஆமைப்பு ஆகிய அனைத்தும் இணைந்து புதிய ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்திய மக்கள் தொகையில் 96 கோடி பேர் மீன் உணவைச் சாப்பிடுவதாகத் தெரிய வந்துள்ளது.
தினமும் மீன் உணவு சாப்பிடுபவர்களில் 53.5% கேரள மக்கள் முதலிடத்தில் உள்ளனர்.
கோவாவில் 36.2% பேரும் மேற்கு வங்கத்தில் 21.90% பேரும் மணிப்பூரில் 19.70% பேரும் அசாமில் 13.10% பேரும் திரிபுராவில் 11.50% பேரும் தினமும் மீன் உண்கிறார்கள்
வாரந்தோறும் மீன் உணவு சாப்பிடுபவர்களில் அசாம், திரிபுரா மாநில மக்கள் 69 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளனர். ஒடிசாவில் 66.8% பேரும் மேற்கு வங்கத்தில் 65.75% பேரும் அருணாச்சலப் பிரதேசத்தில் 65.25% பேரும் தமிழ்நாட்டில் 58.2% பேரும் வாரம் ஒருமுறை மீன் உண்கிறார்கள்.
ஆனாலும், பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளில் மீன் சாப்பிடுவது 3.9% ஆகக் குறைந்துள்ளது.
இருப்பினும் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் குறைந்த அளவிலேயே மீன் சாப்பிடுபவர்கள் உள்ளனர். மீன் சாப்பிடுபவர்களைக் கொண்ட 183 நாடுகளில் இந்தியா 129வது இடத்தில் உள்ளது. எனினும், உலகின் 3வது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா 8% பங்கு வகிக்கிறது. மீன் வளர்ப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.