அகமதாபாத்: தொழிலதிபரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சாண்ட் ஜோடிகளின் திருமணம் ஜூலை மாதம் 12ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.
ஜாம் நகரில் நடந்து வரும் இந்நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மணமகன் ஆனந்த் அம்பானி விருந்தினர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது, “எனக்காக என் குடும்பத்தினர் பல்வேறு விஷயங்களைச் செய்துள்ளனர். எனது வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல, முட்களின் வலியை நானும் அனுபவித்துள்ளேன்.
“சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் என்னைக் கைவிடவில்லை. எப்போதும் எனக்கு முழு ஆதரவு அளித்தார்கள்,” என உருக்கமாகப் பேசினார்.
இதைக்கேட்டு தந்தை முகேஷ் அம்பானி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். அவர் தேம்பி அழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.