பாட்னா: கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் நாட்டில் யாரும் பயனடையவில்லை என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பொய்களின் மன்னர் என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற கார்கே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டைச் சீரழித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த மோடி அவ்வாறு செய்தாரா என்று கார்கே கேள்வி எழுப்பினார்.
பல்வேறு நாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரப்போவதாகவும் 2022ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் பிரதமர் மோடி முன்வைத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டனவா என்றும் கார்கே கேள்வி எழுப்பினார்.
பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரசுக்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் என்றும் ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் அமைப்பையும் காப்பாற்றுவது அனைவரின் கடமை என்றும் கார்கே மேலும் தெரிவித்துள்ளார்.

