லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாராபங்கித் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திர சிங் ராவத், தன் மீது சுமத்தப்பட்ட ஆபாசக் காணொளிக் குற்றச்சாட்டை அடுத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் இவரது பெயரில் ஓர் ஆபாசக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
அந்த சர்ச்சைக்குரிய காணொளியில், இடம்பெற்றிருந்த ஆபாசக் காட்சியில் இருப்பவர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திர சிங் ராவத் என்கிற பதிவுகளுடன் அந்தக் காணொளி பகிரப்பட்டு வந்தது. இதற்கு எதிராக உபேந்திர சிங் சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்தக் காணொளி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உபேந்திர சிங் ராவத், “எனது பெயரைக் கெடுப்பதற்காக சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் அந்த ஆபாசக் காணொளியில் எனது உருவத்தை இணைத்துள்ளனர் என்றார்.
“இதையடுத்து பாராபங்கி தொகுதியில் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கும்வரை எந்தத் தேர்தலிலும் நிற்கப் போவதில்லை,” என்று கூறியுள்ளார்.


