தும்கா (ஜார்க்கண்ட்): இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், தும்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்பானிய பெண் சுற்றுப்பயணி ஒருவரைக் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், அந்த மாதின் கணவருக்கு ஜார்க்கண்ட் காவல்துறையினர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளனர்.
“மாவட்ட நிர்வாக தரப்பில் நாங்கள் விரைந்து விசாரணை மேற்கொண்டோம். பாதிக்கப்பட்டவருக்கும் அவருடைய கணவருக்கும் அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.
“பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அவர்களுக்கு ரூ.10 லட்சம் காசோலையை வழங்கியுள்ளோம். இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க நாங்கள் முற்படுவோம்,” என்று ஜார்க்கண்ட் காவல்துறை துணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோட் திங்கட்கிழமை கூறினார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் கணவர், விரைவான விசாரணைக்காக ஜார்க்கண்ட் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்.
காவல்துறையைப் பொறுத்தவரை, இந்த வழக்கில் எழுவர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.