புதுடெல்லி: நாட்டில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இண்டியா கூட்டணி ஒரு முற்றுப்புள்ளி வைத்து மூடிக்கிடக்கும் வேலைவாய்ப்புக் கதவுகளைத் திறக்கும் என்று ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை என அவர் குற்றம் சாட்டி வருகிறார். இந்த பணியிடங்கள் அனைத்தும் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நிரப்பப்படுவதோடு மேலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நாட்டின் இளைஞர்களே ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு வழங்குவது நரேந்திர மோடியின் நோக்கம் அல்ல. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதுடன், மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் மெத்தனம் காட்டி வருகிறார் மோடி.
“நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வழங்கிய தரவுகளின்படி, 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் முக்கிய துறைகளான ரயில்வே துறையில் 2.93 லட்சம் பணியிடங்கள், உள்துறைப் பிரிவில் 1.43 லட்சம், பாதுகாப்புத் துறையில் 2.64 லட்சம் பணியிடங்கள் காலியாகி இருக்கின்றன.
“15 மிகப்பெரிய துறைகளில் 30 விழுக்காட்டுக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இது ஏன் என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இருக்கிறதா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
“பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வரும் பிரதமரின் அலுவலகத்திலேயே ஏன் அதிக எண்ணிக்கையிலான மிக முக்கியமான பதவிகள் காலியாக உள்ளன?
“நிரந்தரப் பணிகளை வழங்குவதை ஒரு சுமையாக கருதும் பா.ஜனதா அரசு தொடர்ந்து ஒப்பந்த பணி முறையை ஊக்குவித்து வருகிறது. அதுபோன்ற ஒப்பந்த வேலைவாய்ப்பில் எவ்வித வேலை உத்தரவாதமும் இல்லை.
“காலியான பணியிடங்களைப் பெறுவது இளைஞர்களின் உரிமை. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு வலிமையான திட்டத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“மூடப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புக் கதவுகளைத் திறப்பதே இண்டியா கூட்டணியின் உறுதிப்பாடு ஆகும். இளைஞர்களின் தலைவிதி, வேலையில்லாத் திண்டாட்டத்தின் இருளை அகற்றி விடியலைக் காணும்,” என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

