புதுடெல்லி: தேர்தல் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் இந்தியில் பேசிய உரை யாவும் இப்போது முக்கிய ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மொழிபெயர்ப்புக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் அவர் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இதன்படி ஏழு மொழிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் காணொளிகள் அவரது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேசினார். அவருடைய தேர்தல் பரப்புரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

