ஜாவன்பூர்: உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
போதாபூரில் வசித்துவந்த பிரமோத் குமார் யாதவ், பாஜகவின் மாவட்ட நிர்வாகத்தின் உறுப்பினராவார். போதாபூரில் தனது காரை ஓட்டிச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அவரது காரை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் பிரமோத் கொல்லப்பட்டார். இதனை ஜாவன்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் பிரிஜேஷ் குமார் தெரிவித்தார்.
“துப்பாக்கிக்காரர்கள் யாதவை நோக்கி நான்கு முறை சுட்டனர். துப்பாக்கிச் சூடு பட்ட அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்,” என்று இன்னொரு காவல்துறை உயர் அதிகாரி அஹே பால் ஷர்மா தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறவிருக்கும் இந்த சமயத்தில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.