புதுடெல்லி: இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத ஆடவரின் புகைப்படத்தை அந்நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பு புதன்கிழமை வெளியிட்டது.
அவர் கைது செய்யப்படுவதற்கு வித்திடும் தகவலைப் பகிர்பவருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அது கூறியது.
அந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமுற்றனர். சில தினங்களுக்கு முன்பு அந்த அமைப்பு விசாரணையை ஏற்று நடத்தத் தொடங்கியது.
தனது எக்ஸ் தளத்தில் அந்தச் சந்தேக ஆடவரின் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் கோரும் அமைப்பு, அதுகுறித்து விவரம் அளிப்போரின் அடையாளம் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்றது.
அந்தப் படத்தில், அந்தச் சந்தேக ஆடவர் சாம்பல் நிற சட்டையும் ஜீன்ஸ் காற்சட்டையும் அணிந்திருப்பது தெரிந்தது. அவர் முதுகில் பை ஒன்றை ஏந்தியிருந்தார். தமது அடையாளத்தைப் பாதுகாக்க, அவர் தலையில் தொப்பியும் கண்ணாடியும் அணிந்திருந்தார்.