குண்டூர்: தான் வசிக்கும் மலைசார்ந்த சிற்றூரில் எவ்விதச் சாலை வசதியும் இல்லாமல் இன்னலுக்கு ஆளாகும் மக்களுக்காக, வீடு கட்டிக் குடியேறும் தனது கனவை ஒத்திவைத்து விட்டு சாலை போட்டு சாதனை செய்துள்ளார் ஒரு பெண்.
ஆந்திர மாநிலத்தின் அரக்கு என்னும் ஊருக்கருகே உள்ள அஞ்சோடா என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் ஜெம்மா. இவருக்கு தோட்ட கோடி புட் மலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடராவ் என்பவருடன் திருமணம் நடந்தது.
அந்த ஊரில் பத்துக் குடும்பத்தினர் மட்டும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு வெகுதூரம் ஒற்றையடிப் பாதையில் நடந்தே செல்ல வேண்டும்.
பிள்ளைப்பேறு காலத்தில் கூட அவர்களைத் தொட்டில் கட்டி ஒற்றையடிப் பாதையில் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
திருமணத்திற்குப் பின் செவிலியராகப் பணியில் சேர்ந்த ஜெம்மா, எப்பாடுபட்டாவது தங்களுக்கென மழையில் ஒழுகாத ஒரு வீடு கட்டி குடிபுக வேண்டும் என்று, தான் சம்பாதிப்பதில் மாதம் 4,000 ரூபாயை சேர்த்து வந்தார்.
வீடு கட்டுவதற்கான வேலைகளைத் தொடங்கவிருந்த ஜெம்மா, வீட்டைக் காட்டிலும் இங்கு வாழும் மக்களுக்கு சாலை வசதிதான் முக்கியம் என்று முடிவெடுத்தார்.
தான் நான்கு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த பணத்தில் ஒரு பொக்லைன்; எந்திரத்தை வாடகைக்கு எடுத்து, அவரது ஊருக்கு சாலை அமைக்கும் பணியைத் தொடங்கினார்.
வெளியூரில் இருந்து திருமணமாகி வந்த இந்த இளம்பெண்ணின் உறுதி அந்த ஊரைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.
இதைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக களமிறங்கினார்கள். அவர்கள் சாலை அமைக்கும் பணியில் தங்களது உடல் உழைப்பை அளித்தனர். ஜெம்மாவின் இந்தத் திட்டத்திற்கு நன்கொடைகள் வரத் தொடங்கின. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஜெம்மா ஒரு மண் சாலையை ஏற்படுத்திச் சாதனை படைத்துள்ளார்.