புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ரத்து செய்தது.
இதுவரை தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், அவற்றின் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகள், நன்கொடைத் தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இதற்கிடையே, இந்தக் கால அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி மனுதாக்கல் செய்துள்ளது. அம்மனு, மார்ச் 11ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், காமன் காஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
அந்த மனுக்களில், ‘கால அவகாசம் முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும்போது பாரத ஸ்டேட் வங்கி ஜூன் 30ஆம் தேதிவரை கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மனு தீயநோக்கம் கொண்டது.
வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாமலும், மீறும்வகையிலும் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இதன் மூலம் தெளிவாகிறது. ஸ்டேட் வங்கி மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது தலைமை நீதிபதி, ‘‘ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். 11ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவு பிறப்பிக்கிறேன்,’‘ என்று கூறினார். எனவே, இம்மனுக்கள் 11ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.