புதுடெல்லி: வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள் வேலை நாள்களுடன் ஆண்டுதோறும் 17% சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த சம்பள உயர்வின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ஏறக்குறைய எட்டு லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.
இந்த 17% ஊதிய உயர்வு 2022 நவம்பர் மாதம் முதல் முன் தேதியிட்டு அளிக்கப்பட உள்ளது என்றும் இதுகுறித்து மத்திய அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட்டவுடன் சம்பள உயர்வு அமலுக்கு வரும் என்றும் இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி வரை கூடுதலாகச் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பணியாளர்கள் பலனடைவர் என்று இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
“வங்கித்துறைக்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். 2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் நடைமுறைக்கு வரும் ஊதிய உயர்வு, பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது,” என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை, அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு படிகளையும் சேர்த்து புதிய ஊதிய நிர்ணயம், மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் இல்லாமல் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ஒருமுறை விடுமுறை எடுப்பதற்கு அனுமதி உள்ளிட்ட அம்சங்களைச் செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும் வங்கி ஊழியர்கள் சங்கமும் ஒப்புக்கொண்டு கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டன.
ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் பணி போன்ற கோரிக்கைகளை பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடந்து வந்த நிலையில், ஊதிய உயர்வு கோரிக்கைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.