புதுடெல்லி: இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அந்நாட்டுச் சுற்றுலாத் துறை கடும்சரிவைச் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை மிகவும் பாதித்துள்ளது. நடந்த நிகழ்வை எண்ணி நான் மிகவும் கவலைப்படுகிறேன். மாலத்தீவு மக்களும் இதுகுறித்து வருந்துகிறார்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன்,” என இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
மேலும், இந்திய மக்கள் தங்கள் விடுமுறை நாள்களில் மாலத்தீவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுடைய விருந்தோம்பலில் எந்த மாற்றமும் இருக்காது,” என திரு முஹம்மது நஷீத் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது பயணம் குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “லட்சத்தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
மோடியின் இந்த பதிவை கேலி செய்யும் வகையிலும், இனவெறியை தூண்டும் வகையிலும் மாலத்தீவைச் சேர்ந்த எம்.பி.க்களும் ஆளும் கட்சியினர் சிலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்தனர்.
இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. மாலத்தீவு செல்வதை இந்தியர்கள் புறக்கணித்தனர். மேலும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டத்தை ரத்து செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.