இம்பால்: மணிப்பூரில் 10 மாதங்களுக்கு முன்னர் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது பெரிய கலவரமாக மாறியது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் கிளர்ச்சியாளர்களை எளிதில் அடையாளம் காண மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில் கோன்சம் கேடா சிங் என்ற ராணுவ அதிகாரி வெள்ளிக்கிழமை அன்று அவரது வீட்டில் இருந்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தில் தற்போது பணிபுரிந்து வரும் கேடா சிங் விடுமுறைக்காக தமது சொந்த ஊரான மணிப்பூருக்கு வந்தபோது கடத்தப்பட்டார்.
கடத்தல் தொடர்பாக கேடா சிங் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
மணிப்பூர் காவல் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் கேடா சிங் சனிக்கிழமை மாலை பத்திரமாக மீட்கப்பட்டார். கடத்தல் சம்பவம் குறித்து மணிப்பூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ வீரர்கள், காவல் அதிகாரிகள் அல்லது அவர்களது உறவினர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.