திருப்பதி: ஆந்திர மாநிலம், சிலக்கலுபேட்டை அடுத்த யாதவல்லியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு டிராக்டர் வாகனத்திற்கு மேல் பிரம்மாண்ட தேர் தயார் செய்யப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் கடவுளின் சிலையை வைத்து ஊர்வலமாக பக்தர்கள் எடுத்துச் சென்றனர். பொது இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் ஊரை நோக்கி தேரை எடுத்துச் சென்றனர்.
அப்போது கொட்டப்ப கொண்டா என்ற இடத்தில் தேர் சென்றபோது மின்கம்பியில் உரசாமல் இருப்பதற்காக தேரின் மேல் பகுதியை லேசாக வளைத்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தேர் திடீரென சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் தேரை வளைத்த நாகேஸ்வரராவ், வாகன ஓட்டுநர் கண்டுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் வாகனத்தின் முன்பகுதி மோசமாக சேதமடைந்தது. காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர்.