புதுடெல்லி: தேர்தல் ஆணையர் அருண் கோயல் சனிக்கிழமை அன்றுபதவி விலகினார். 2027-ம் ஆண்டு டிசம்பர் வரை பதவி காலம் இருந்த நிலையில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே கடந்த பிப்ரவரியில் மற்றொரு தேர்தல் ஆணையராக இருந்த அனூப் பாண்டே ஓய்வு பெற்றார். இதையடுத்து 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையக் குழுவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார். இரண்டு தேர்தல் ஆணையர் பதவிகள் காலியாக உள்ளன.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசை சாடியுள்ளார்.
“இன்னும் சில நாள்களில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்தியாவில் தற்போது ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருப்பது ஏன்?
“தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் புதிய நடைமுறை தற்போது ஆளும் கட்சிக்கும், பிரதமருக்கும் அனைத்து அதிகாரங்களை வழங்கியுள்ள நிலையில் அனூப் பாண்டே பதவி காலம் முடிந்த பிறகும் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்காதது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு மோடி அரசு பதில் சொல்லி நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும்,” என்று மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.