மணிப்பூர்: இனக்கலவரத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் மணிப்பூருக்கு ஒருமுறை வந்து அமைதியை மீட்டெடுக்குமாறு பிரதமர் மோடிக்குப் பிரபல குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரென் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூரைச் சேர்ந்த கலப்பு தற்காப்புக்கலை குத்துச்சண்டை வீரரான சுங்ரெங் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
‘மேட்ரிக்ஸ் ஃபைட் நைட்’ என்ற போட்டியில் பங்கேற்ற பின்னர், கண்ணீர் மல்க சுங்ரெங் பேசியுள்ள காணொளியில், “இது எனது தாழ்மையான வேண்டுகோள். மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது. கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது.
“மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு உணவு, குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குழந்தைகளால் சரியாகப் படிக்க முடிவதில்லை. எதிர்காலம் நிச்சயமற்றதாகி உள்ளது. மோடிஜி அவர்களே, தயவுசெய்து மணிப்பூருக்கு ஒரு முறை வந்து மாநிலத்தில் அமைதியை மீட்டெடுங்கள்,” என்று கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தினர் கடந்த ஆண்டு மே மாதம் பேரணி நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறை தற்போது வரை தொடர்கிறது.
அங்கு இதுவரை நிகழ்ந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மணிப்பூரில் பழங்குடியினரிடையே வன்முறை மூண்ட பிறகு அம்மாநிலத்துக்கு பிரதமர் மோடி ஒரு முறை கூட செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரென் பிரதமர் மோடியை தங்கள் மாநிலத்துக்கு வரும்படி கண்ணீர்மல்க அழைப்பு விடுத்திருப்பது அங்குள்ள மக்களிடையே பேசு பொருளாகி உள்ளது.