புதுடெல்லி: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கட்கிழமை நிகழ்ந்த கொள்ளை முயற்சியில் சிற்றுந்து ஓட்டுநர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
ஆனால், சிற்றுந்தில் இருந்த 17 பயணிகளைக் காக்க 30 கிலோமீட்டர் தூரம் அவர் வாகனத்தைத் தொடர்ந்து ஓட்டியதாக என்டிடிவி செய்தி தெரிவித்தது.
கோயிலுக்குச் சென்றுவிட்டு, மகாராஷ்டிராவின் அமராவதியில் இருந்து நாக்பூருக்கு அச்சிற்றுந்து சென்றுகொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளை முயற்சி அரங்கேறியது.
அடையாளம் தெரியாத நான்கு நபர்களுக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்றம் புரிந்தவர்களைத் தேடி கண்டுபிடிக்க தனிக்குழுவை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
கொள்ளையர்கள் காரில் இருந்ததாகவும் சிற்றுந்தை நிறுத்த அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் காம்தேவ் கவாடே எனும் அந்தச் சிற்றுந்து ஓட்டுநர் கூறினர்.
தம் கையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், சிற்றுந்தை நிறுத்தாமல் 30 கி.மீ. தூரம் ஓட்டி காவல் நிலையத்தைச் சென்றடைந்ததாகச் சொன்னார்.
இச்சம்பவத்தில் சிற்றுந்துப் பயணிகள் மூவருக்கும் காயம் ஏற்பட்டது. திவ்சா எனும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொள்ளையர்கள் பொலிரோ எஸ்யுவி வாகனத்தில் வந்ததாகவும் அது உத்தரப்பிரதேச பதிவு எண்ணைக் கொண்டிருந்ததாகவும் திரு கவாடே சொன்னார்.
“அமராவதியில் இருந்து நாக்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது பொலிரோ கார் எங்களைப் பின்தொடர்ந்தது.
“முன்னால் செல்ல அந்த காருக்கு இருமுறை நான் வழிவிட்டேன். ஆனால் கார் எங்களை முந்தவில்லை.
“சற்று நேரம் கழித்து, காரில் இருந்தவர்கள் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். முதல்முறை சுட்டபோது குறி தவறியது. ஆனால், இரண்டாவது முறை துப்பாக்கிக்குண்டு என் கையில் பாய்ந்தது,” என்று திரு கவாடே கூறினார்.