பெங்களூரு: கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் இந்தியாவின் பெங்களூரு நகரில் புட்டிகளில் அடைத்து வரும் நீருக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மக்கள் 20 லிட்டர் கலன்களை வாங்குவது அதிகரித்துள்ளது.
தேவை கூடியுள்ளபோதும் நீர்க்கலன்களின் வரத்து போதுமானதாக இருப்பதால் அவற்றின் விலையை உயர்த்தவில்லை என்று பேரங்காடி உரிமையாளர்கள் சொன்னதாக ‘டெக்கான் ஹெரால்டு’ செய்தி தெரிவிக்கிறது.
அங்கு 20 லிட்டர் நீர்க்கலன்கள் ரூ.40 முதல் ரூ.85 வரை விற்கப்படுவதாக அச்செய்தி கூறியது.
நீர்க்கலன் தேவை அதிகரிப்பிற்குத் தண்ணீர்ப் பஞ்சம் மட்டுமின்றி, கோடைக்காலம் நெருங்குவதும் ஒரு காரணம் எனப் பேரங்காடி உரிமையாளர்கள் பலர் கூறினர்.
முன்னதாக, கார் கழுவுதல், தோட்டம், கட்டுமானம், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு குடிநீரைப் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

