இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ‘ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி(பி)‘ என்ற ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத கிளர்ச்சிக் குழு செயல்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவரான தாக்சோம் தொய்பா என்பவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தேசியப் புலனாய்வு முகவை (என்ஐஏ) அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் மணிப்பூர் காவல்துறை, என்ஐஏ, தேசிய காவல் படையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் தாக்சோம் தொய்பா மற்றும் அவரின் கூட்டாளியான லைமாயும் இங்பா ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் 10 மாதங்களுக்கு முன்னர் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது பெரிய கலவரமாக மாறியது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.