புதுடெல்லி: இந்தியாவில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், 23 வகையான நாய் ரகங்களை வீட்டில் வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களால் அதிக அளவிலான குழந்தைகள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். நாய்க் கடியால் ‘ரேபிஸ்’ தொற்றுநோய் உருவாகி உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது.
இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 23 வகையான நாய்களை வீட்டில் வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள மத்திய அரசு, “வளர்ப்பு நாய்கள் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால், பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போயர்போல் கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ உள்ளிட்ட 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும்.
“தடை செய்யப்பட்ட இந்த நாய் இனங்களை விற்பனை செய்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் வழங்கக் கூடாது,” எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தில் மூன்று பெண்கள், இரு குழந்தைகள் உள்பட 17 பேரை வெறிநாய் ஒன்று கடித்ததை அடுத்து, அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த நாய் பிடிக்கப்பட்டதா என்பது குறித்த விவரம் இல்லை.