புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பங்ளாதேஷ் கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களை இந்தியக் கடற்படை வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை வாயிலாக வெளியிட்டது.
மொசாம்பிக் தலைநகர் மபுடோவில் இருந்து ஐக்கிய அரபு சிற்றரசுக்கு 55,000 டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு பங்ளாதேஷ் நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.வி. அப்துல்லா’ கப்பல் சோமாலியக் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை நண்பகலில் அந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.
இதையடுத்து அவசர உதவிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையறிந்த இந்தியக் கடற்படை உடனடியாக நீண்டதூர சுற்றுக்காவல் விமானத்தை அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அப்துல்லா கப்பல் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது.
கப்பலின் சூழ்நிலையைக் கேட்டறிய அதிலிருந்த ஊழியர்களிடம் தொடர்புகொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பதில் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான போர்க்கப்பல் அனுப்பிவைக்கப்பட்டு மார்ச் 14ஆம் தேதி காலை அப்துல்லா கப்பல் இடைமறிக்கப்பட்டது.
மேலும், ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்ட பங்ளாதேஷ் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மேலும் அதிலிருந்த ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என்று இந்தியக் கடற்படையின் தகவல் தெரிவித்தது.
‘எம்.வி. அப்துல்லா’ கப்பலை சோமாலியக் கடற்கொள்ளையர்கள் 15 முதல் 20 பேர் கடத்தியதாகக் கூறப்படுகிறது.

