புதுடெல்லி: அமலாக்கத் துறைக்கு எதிராக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பில் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.கவிதாவை அமலாக்கத் துறையினர் கடந்த 15ஆம் தேதி கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அவரிடம் விசாரணை நடத்துவதற்கு கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட டெல்லி நீதிமன்றம் அவரை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கவிதாவை கைது செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த சூழலில், அவர் திடீரென கைது செய்யப்பட்டது குறித்து விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி என்.கே.நாக்பால் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், தன்னைக் கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் கைதை ரத்து செய்து தன்னை விடுவிக்கக் கோரியும் கவிதா சார்பில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மேலவை உறுப்பினரான கவிதாவின் கைதுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவை நன்கு விசாரித்த பின்னரே அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர் என்றார் அவர்.