புதுடெல்லி: எதிர்வரும் மக்களவைத் தேர்தலை ஒட்டி பல்வேறு தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வரும் காங்கிரஸ் கட்சி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை ஊழியர்களுக்கான ஊதியம் நாள் ஒன்றுக்கு 400 ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
‘உழவர் நீதி’, ‘இளைஞர் நீதி’, ‘மகளிர் நீதி’, ‘தொழிலாளர் நீதி’ உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை, பணிபுரியும் மகளிர் தங்குவதற்கேற்ற சாவித்ரிபாய் புலே தங்கும் விடுதி, மத்திய அரசுப் பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை பணியாளர்களுக்கு ஒரு நாள் பணிக்கான ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்.
“அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீட்டுத் திட்டங்கள், தொழிலாளர்களின் சுகாதார உரிமை ஆகியவற்றை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும்,” என்றார்.
இந்த முறையும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியவில்லை எனில், மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறியுள்ளனர்.
எனவே கட்சியை மீட்க, காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், இவை பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.