லகிம்பூர்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடப்பில் உள்ள கூட்டுத் திருமணத் திட்டத்தின்கீழ், திருமண நிகழ்வுக்கு மணமகன் வராததால், அத்திட்டத்தின் அனுகூலங்களைப் பெற மணமகள் தம் சகோதரரை திருமணம் செய்துகொண்டார்.
லகிம்பூரில் மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற கூட்டுத் திருமண நிகழ்வின்போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை திங்கட்கிழமை தெரிவித்தது.
திருமண நிகழ்வுக்கு மணமகன் ரமேஷ் யாதவ் குறிப்பிட்ட நேரத்தில் வர இயலாததால், தம் சகோதரர் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொள்ளுமாறு இடைத்தரகர்கள் சிலர் மணமகள் பிரித்தி யாதவ்விடம் கேட்டுக்கொண்டனர்.
கூட்டுத் திருமணத் திட்டத்தின்கீழ், திருமணம் செய்துகொண்டால் அத்தம்பதியருக்கு ரூ.51,000 வழங்கப்படுமாம்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அந்த உடன்பிறப்புகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கிராமப்புற மேம்பாட்டு அதிகாரி ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.