ஒடிசா: வன அதிகாரிகளின் அனுமதியின்றி வனவிலங்குகளுடன் செல்ஃபி அல்லது புகைப்படம் எடுத்துக்கொள்பவர்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறை அனுபவிக்க நேரிடும் என்று ஒடிசாவின் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சுஷாந்த் நந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கோட்ட வன அலுவலர்கள், முக்கிய வனவிலங்குப் பகுதிகளின் துணை இயக்குநர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “மக்கள் வனவிலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்/ செல்ஃபிகளை சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
“இதுபோன்று புகைப்படம் / செல்ஃபி எடுப்பதன் மூலம் விலங்குகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகவும் இருக்கிறது.
“வன விலங்குகளைப் புகைப்படம் எடுப்பதற்கு முன்பு வன அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.
“இதுபோல் அனுமதி பெறாமல் புகைப்படம், செல்ஃபி எடுத்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
“இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘ஹெல்ப்லைன்’ எண்களை வழங்கவும், வனவிலங்குகளுக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும் கள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.