புதுடெல்லி: ஊழலை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய பிரதமர், “எதிர்க்கட்சியினர் பாஜகவின் கைப்பாவையாக அமலாக்கத்துறையினர் செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
“கடந்த 2014ல் தாம் ஆட்சிக்கு வரும் முன்பு அமலாக்கத்துறையினர் சிறிய பொருளியல் குற்ற வழக்குகளை மட்டுமே விசாரித்து வந்தனர்.
ஆனால், இப்போது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதித்திரட்டுவது, இணையக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பெரிய அளவிலான குற்றங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என மோடி தெரிவித்தார்.
முந்தைய ஆட்சிகளில் மொத்தம் 1,800 வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டு, ரூ.5,000 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் 4,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏறக்குறைய 1 லட்சம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்காக எதிர்க்கட்சியினர் தம்மீது விமர்சனங்களைக் கூறி வருவதாக சாடிய மோடி, மக்கள் அவர்களை ஏற்கமாட்டார்கள் என்றார். எதிர்க்கட்சிகளை நிராகரிக்குமாறு கூறிய அவர், தாம் கனவுகளையும் மீறி மக்களின் நல்வாழ்வுக்கு நல் உத்தரவாதம் அளித்து வருவதாக தெரிவித்தார்.