புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 2024ல் பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜகவும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் தொகுதிப்பங்கீட்டை இறுதிசெய்துள்ளன.
இது தொடர்பான அறிவிப்பை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாடே திங்கட்கிழமை வெளியிட்டார். இதன்படி பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களில் போட்டியிடுகிறது..
பிற கூட்டணிக் கட்சிகளில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஐந்து இடங்களில் போட்டியிடுகிறது. ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஆகியவை தலா ஓரிடத்தில் போட்டியிடுகின்றன.
கடந்த 2019 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பாஜக, ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இக்கட்சிகள் மொத்தமுள்ள 40 இடங்களில் 39-ல் வெற்றிபெற்றன. ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணி ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பாஜக, ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இக்கட்சிகள் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் வெற்றிபெற்றன. ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணி ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.
கடந்ததேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா 17 இடங்களில் போட்டியிட்டன. இம்முறை பாஜக அதே எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடும் நிலையில் ஐக்கிய ஜனதா தளம் ஓரிடத்தில் குறைவாகப் போட்டியிடுகிறது.
கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவைவிட அதிகமான இடங்களில் போட்டியிட்டது. 2019ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பின் பாஜகவுடன் மொத்த தொகுதிகளையும் பகிர்ந்துகொண்டு 17 இடங்களில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பாஜகவைவிட ஒரு தொகுதி குறைவாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.