பாட்னா: பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனருமான (ஆர்ஜேடி) லாலு பிரசாத் யாதவின் வாரிசுகளான தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், டாக்டர் மிசா பாரதி ஆகிய மூவரும் ஏற்கெனவே அரசியலில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில், அவரது மகள் ரோகிணி ஆச்சார்யாவை இந்தத் தேர்தலில் களமிறக்கலாம் என்று கூறப்படுகிறது.
லாலு பிரசாத் மருத்துவமனையில் இருந்தபோது அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டதோடு தந்தைக்கு சிறுநீரகத்தைத் தானமாக அளித்து மக்களின் பாராட்டைப் பெற்றவர் ரோகிணி.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள மேலவை உறுப்பினரான (எம்எல்சி) சுனில் குமார் சிங், தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறும்போது, சிங்கப்பூரில் வசித்து வரும் லாலுவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியல் அரங்கில் நுழையத் தயாராக உள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வரும் ரோஹிணி ஆச்சார்யா, இதுதொடர்பான செய்திகளுக்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் ரோகினி செவ்வாய்க்கிழமை காலை தனது அண்ணனும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை புகழ்ந்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டார்.