பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் அண்மையில் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து, இப்போது அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு அருகே ஏராளமான வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பெல்லந்தூரில் பிரக்ரியா பள்ளிக்கு எதிரில் உள்ள காலி நிலத்தில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மற்றும் சில வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விவசாய நிலங்களை உழவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் இந்த வெடிபொருள்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெல்லந்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வெடிபொருள்கள் பாறையை உடைப்பதற்குப் பயன்படுத்தப்படுவது என்று கூறப்பட்டாலும், உரிமமின்றி சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்டிருந்தது ஏன்? எதற்காக? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெடிபொருள்களை வைத்திருந்தது யார் என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ஆம் தேதி பட்டப்பகலில் நடந்த குண்டு வெடிப்பில் பத்து பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பை நடத்திய குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூரு காவல் துறை, என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் பெங்களூருவில் ஏராளமான வெடிபொருள்கள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.