மும்பை: மகாராஷ்டிரா மாநில எல்லைக்குள் ஊடுருவிய நான்கு நக்சலைட்டுகள் காவலர்களின் ‘என்கவுன்டர்’ நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம், கச்சிரோலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், பல்வேறு மாநிலங்களிலும் தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் அமைப்பைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவர்களின் தலைக்குத் தலா ரூ.9 லட்சம் வெகுமதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு மாநிலங்களிலும் சட்டவிரோதச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானாவில் இருந்து சென்ற சில நக்சலைட்டுகள் பிரனாஹிதா நதியைக் கடந்து மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்துக்குள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கச்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படையின் விரைவு நடவடிக்கை குழுவினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, நக்சலைட்டுகள் காவலர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதனைத்தொடர்ந்து காவலர்களும் நக்சலைட்டுகளுக்குப் பதிலடி கொடுத்ததை அடுத்து, நான்கு நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். விசாரணையில், தலா ரூ. 9 லட்சம் வீதம் நால்வரது தலைக்கும் ரூ.36 லட்சம் விலை வைத்து உயிரிழந்த நான்கு பேரையும் தேடி வந்தது தெரியவந்தது.
உயிரிழந்த வர்கீஸ், மக்து இருவரும் வெவ்வேறு நக்சல் அமைப்புகளின் செயலாளர்கள். மற்ற இருவரும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு, வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கார்பைன், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் இயக்கப் பிரசுரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டன.