திருவனந்தபுரம்: கட்டுமானத்துக்கான கற்களை ஏற்றிச் சென்ற ‘டிப்பர்’ லாரியிலிருந்து கல் ஒன்று 24 வயது மருத்துவக் கல்லூரி மாணவர் மீது விழுந்ததால் அவர் உயிரிழந்தார்.
சம்பவம் மார்ச் 19ஆம் தேதியன்று காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்ததாகவும் உயிரிழந்தவரின் பெயர் அனந்து என்றும் அறியப்படுகிறது.
தனது இரண்டு சக்கர வாகனத்தில் அந்த இளைஞர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது கல் அவர் மீது விழுந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் காயங்கள் காரணமாக அவர் மாண்டுவிட்டார்.
இதற்கிடையே, லாரி ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லாரியில் அதிகப்படியான கிரானைட் கற்கள் ஏற்றப்பட்டதால் இவ்வாறு கல் விழுந்திருக்கலாம் என்று அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
இத்தகைய பாரத்தை ஏற்றிச் செல்லும்போது கனரக வாகனங்கள் முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை அதிகாரிகள் உறுதிசெய்யத் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், மகனின் இழப்பால் தாயார் பிந்து, மனமுடைந்து போயுள்ளார்.
விபத்து நடந்த அதே நாளில் தனது இதயப் பிரச்சினைக்குச் சிகிச்சை நடக்கவிருந்ததால் அதற்கான மருத்துவச் சந்திப்பு சீட்டை அனந்து தன்னுடன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
மகன் உயிர்பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மருத்துவமனைக்குச் சென்ற பிந்து, பின்னர் சுயநினைவிழந்த நிலையில்தான் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
படிப்பை முடித்ததும் மருந்தகம் ஒன்றை அமைத்து, குடும்பத்தின் கடனை அடைத்து, வெளிநாட்டில் உடல்நலமில்லாமல் உள்ள தன் தந்தையை மீண்டும் வரவழைக்கும் திட்டத்தில் அனந்து இருந்தார்.